

தனது ஒரே மகன் மீது மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரது தந்தை திடீரென உயிரிழந்தார்.
கம்பம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் முபாரக் அலி (68). இவரது மகன் முகமது இர்ஃபான் (24) எம்.ஏ பட்டதாரியான இவர் காவல் துறை பணியில் சேர பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சுப்பிரமணிய கோயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடியில் உள்ள மரக் கட்டைகளை எடுக்கச் சென்றார்.
அப்போது தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் இருந்து, இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலத்தில் பெரியளவில் முன்னேற்றம் இல்லாததால் அவரது தந்தை முபாரக் அலி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை முபாரக்அலி திடீரென உயிரிழந்தார். முபாரக் அலிக்கு 5 குழந்தைகள் பிறந்த நிலையில், இதில் 4 குழந்தைகள் சிறு வயதில் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டனர். ஒரே மகன் முகமது இர்ஃபானை நன்கு படிக்க வைத்து காவல்துறை அதிகாரியாக்க ஆசைப்பட்டார். ஆனால் மகன் மீது மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மன உளைச்சலிலே இருந்தவர் திடீரென இறந்து விட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
உயர் அழுத்த மின் வழித்தடப் பாதையில் கட்டிடம் கட்ட மின்வாரியத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ள து. விதிமுறைகளை மீறி கட்டுமானம் நடந்ததால் இச்சம்பவம் நடந்ததாக மின்வாரியத் துறையினர் தெரிவித்தனர்.