

மதுரை: ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பர் அலுவலகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய வழக்கில் போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட 5 பேர் மீது கரிமேடு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 9-ம் தேதி அதிகாலையில் பயணிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசனை, அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து காலணியால் தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து மாரிமுத்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் போராட்டங்களை நடத்திவந்தனர்.
இந்நிலையில், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் மாரிமுத்து மற்றும் அவருடன் அடையாளம் தெரிந்த 4 பேர் தன்னை காலணியால் தாக்கி அவதூறாக பேசியதாக கூறி ஓட்டுநர் கணேசன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
ஓட்டுநர் கணேசன் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் மீதும் அரசு பணியாளரை தாக்குதல், மிரட்டல், அசிங்கமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கூட்டமாக சேர்ந்து தாக்குதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்