ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரயில்வே ஊழியரிடம் ரூ.22.72 லட்சம் மோசடி: சென்னையில் ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்
Updated on
1 min read

சென்னை: ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ரயில்வே ஊழியரிடம் ரூ.22.72 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கடந்த ஜனவரி 13-ம் தேதி நண்பர் ஒருவர் அறிமுகமானார். இந்நிலையில் இவர், தான்ன் கூறும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய டில்லிபாபு, அந்த நபர் தெரிவித்த நிறுவனத்தில் ஆன்லைன் முதலீடு செய்ய சுயவிவரம், வங்கி விபரம், ஆதார் விபரம் உள்பட பல்வேறு விபரங்களைப் பதிவு செய்துள்ளார்.

பின்னர், அவர் பணம் மட்டும் அல்லாமல் அவரது தாயார் பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 72 ஆயிரத்து 434-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அப்படி இரட்டிப்பு பணம் மட்டும் அல்லாமல் டில்லிபாபு செலுத்திய பணம் கூட கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாகச் சென்னை வடக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக டில்லிபாபு அனுப்பி வைத்த வங்கி எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கிக்கணக்கின் விபரங்கள், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஐ.பி விபரங்கள் மற்றும் அதன் நெட்வொர்க் யூசர் ஐடி முகவரி ஆகியவற்றை பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சென்னை உத்தண்டியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் (55) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவரது வங்கி கணக்கை பெற்ற மோசடிக்காரர்கள் அந்த வங்கி கணக்குக்கு, டில்லிபாபுவை பணம் அனுப்ப வைத்து, பின்னர், மோசடியாகப் பறிக்கப்பட்ட பணத்தை முத்துமாணிக்கம் மூலம் பெற்றுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட கும்பல் வெளிநாட்டிலிருந்து செயல்படுவது தெரியவந்தது. அவர்களை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in