சோளிங்கர் அருகே சிறுமி படுகொலை: இளைஞரை பிடித்து காவல் துறை விசாரணை

சோளிங்கர் அருகே சிறுமி படுகொலை: இளைஞரை பிடித்து காவல் துறை விசாரணை
Updated on
1 min read

சோளிங்கர் அருகே 10ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்தார். இதனை, தடுக்கச் சென்ற மற்றொரு மாணவிக்கும் கத்திக்குத்து விழுந்து படுகாயமடைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத்குமார் (42). தச்சு தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவி, கார்த்திகேயன் என்ற மகன் மற்றும் ஜனனி (15) என்ற மகள் உள்ளனர்.

சிறுமி ஜனனி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக ஜெகத்குமார் - பிரியா தம்பதி பிரிந்துள்ளனர். கணவரை பிரிந்த பிரியா திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகையில் மகனுடன் வசித்து வருகிறார். கணவர் ஜெகத்குமார் தனது தாய் மற்றும் மகள் ஜனனியுடன் புலிவலம் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெகத்குமாரின் சகோதரி மகள்களான லக்‌ஷயா (16), 11ம் வகுப்பு மாணவி சரண்யா ஆகியோர் கோடை விடுமுறைக்காக, மாமா மற்றும் பாட்டி வசிக்கும் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். இதனிடையே, நேற்று 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென வீட்டுக்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் கூச்சலிட்டுள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சிறுமிகளை தாக்கத் தொடங்கி, ஜெகத்குமார் மகள் ஜனனியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற லக்‌ஷயாவையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சிறுமி படுகாயமடைந்தார். சிறுமிகளில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜனினியின் பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பிடித்து கொண்ட பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, படுகாயமடைந்த லக்‌ஷயாவையும், உயிரிழந்த ஜனனியின் உடலையும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இளைஞர் யார் ? கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in