

சென்னை: இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக திரைப்பட இயக்குநர் கவுதமன் மகன் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அனகாபுத்தூர் காமராஜபுரம் அருகே உள்ள கணபதிநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (35).
இவர் அங்கு மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் குடும்பத்துடன், தனக்கு சொந்தமான ஆட்டோவில் அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள ஒரு உணவகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார்.
உணவருந்திய பின்னர் ஆட்டோவை எடுக்க வந்தார். அப்போது அவரது ஆட்டோ மீது இரு இளைஞர்கள், தள்ளாடியபடி படுத்திருந்தனர். அவர்கள் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த சண்முகம், அவர்களை கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு இளைஞர்களும், சண்முகத்தை தாக்கி உள்ளனர். இதில், அவருக்கு மூக்கு மற்றும் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர், தாக்குதல் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சண்முகத்தை தாக்கியது திருவேற்காடு அம்மன்நகர் 4-வது குறுக்கு தெருவில் வசிக்கும் பிரபல திரைப்பட இயக்குநர் கவுதமனின் மகன் தமிழழகன் (24), அவர் நண்பர் அமைந்தகரை மேத்தாநகர் வட அகரம் தெருவை சேர்ந்த சரத் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.