

சென்னை: திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பிடித்து, போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். சென்னை கொடுங்கையூர் எம்ஆர் நகர் முதலாவது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெ.மனோஜ்குமார்(19). இவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
தப்பியோட முயற்சி: இந்நிலையில் மனோஜ்குமார் சென்ட்ரலில் இருந்து கோட்டூர்புரம் செல்லும் மாநகரப் பேருந்தில் நேற்று முன்தினம் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பேருந்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
உடனடியாக அந்த மாணவி சத்தமிட்டு கண்டித்தார். இதையடுத்து பேருந்தில் இருந்து மனோஜ்குமார் தப்பித்து ஓட முயன்றார். அப்போது அவரைப் பிடித்து பயணிகள் தாக்கி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அவரது செல்போனில், பேருந்து, வணிக வளாகங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.