Published : 05 May 2025 05:15 AM
Last Updated : 05 May 2025 05:15 AM
திருவாரூர் / திருப்புவனம்: திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன்-அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாஜிநாத்(25), ராஜேஷ்(30), ராகுல்(29), சுஜித்(25), சாபு(25), சுனில்(35), ரஜினிஷ்(40) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேன் மூலம் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுள்ளனர். வேனை ராஜேஷ் ஓட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கருவேப்பஞ்சேரி என்ற இடத்தில் நேற்று காலை வந்தபோது, வேன் மீது நாகப்பட்டினத்தில் இருந்து சாயல்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேன் முற்றிலும் சேதமடைந்து, வேனில் பயணித்த சாஜிநாத், ராகுல், சுஜித், ஆம்னி வேன் ஓட்டுநர் ராஜேஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சாபு, சுனில், ரஜினிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவவர்கள் அவர்களை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எடையூர் போலீஸார், உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒரத்தூர் சரவணனை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT