

கடலூர்: கடலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள எம். புதூரை சேர்ந்தவர் நேரு (60). இவர் அதிமுக கிளை கழகச் செயலாளர். இந்நிலையில், இவர் இன்று (ஏப்.21) காலை அவரது முந்திரி தோப்பில், முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக நாகிய நத்தம் பகுதியை சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25), ஆகியோரை அவரது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நேருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த இரு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.