

மதுரை: மதுரையில் கட்டிடத் தொழிலாளி வெட்டிக் கொன்ற ஓய்வு பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து கடந்த 2009-ல் ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்தவர் கட்டிடத் தொழிலாளி அழகுபாண்டி (34). இருவருக்கும் இடையே வீட்டு வாசல் பகுதியை பயன்படுத்துவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை நடராஜன் வீட்டுக்குள் சென்று அழகுபாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து அழகுபாண்டியை கையில் வெட்டியுள்ளார். இதில் ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே அழகுபாண்டி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக நடராஜனை பிடித்து விசாரிக்கின்றனர். ஓய்வு பெற்ற காவலர் கட்டிடத் தொழிலாளி வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.