

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புளியமரத்துகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(70), ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். கடந்த 11-ம் தேதி இவர் வீட்டில் இறந்து கிடந்தார். இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். இறந்த மாரியப்பன் உடலை புதைத்த இடத்தில் தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். விசாரணையில், மாரியப்பனை, அவரது தோட்டத்தில் வேலை செய்த 17 வயது சிறுவன் நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.