கடலூர் அருகே லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு 

கடலூர் அருகே லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு 
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே லாரி டிரைவரை தாக்கி, லாரி கண்ணாடியை உடைத்து அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ராஜி( 38). லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பெருமுக்கல் பகுதியில் இருந்து ஜல்லியை டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி -கடலூர் வழியாக குறிஞ்சிப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது இன்று (ஏப்.13) அதிகாலை சுமார் 4.45 மணி அளவில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள தா.பாளையம் பொன்னாங்குப்பம் பகுதியில் காலைக்கடனை முடிப்பதற்காக சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள சவுக்கு மரத்தோப்பிற்கு சென்றபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் ராஜியை தாக்கி, லாரியின் முன்புற கண்ணாடியை உடைத்து, செல்போனை எடுத்துக்கொண்டு, அவரிடம் இருந்த ரூ.20,000 ஆயிரம் பணத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது குறித்து ராஜி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in