

தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ்(31). இவர், கடந்த 2019-ம் ஆண்டில் 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பாக எட்டயபுரம் போலீஸாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜுக்கு, கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், வன்கொடுமை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், போக்சோ குற்றத்துக்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.