சென்னை: மாஞ்சா நூல், காற்றாடி தயாரித்து விற்பனை செய்தவர் கைது

சென்னை: மாஞ்சா நூல், காற்றாடி தயாரித்து விற்பனை செய்தவர் கைது
Updated on
1 min read

முத்தியால்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல், காற்றாடி தயாரித்து விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் காற்றாடி, மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்வது மற்றும் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், காற்றாடி பறக்க விடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்தியால்பேட்டை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மண்ணடி சைவ முத்தையா 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு தடை செய்யப்பட்ட காற்றாடி, மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்யப்படு வது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, காற்றாடி, மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்த ராகவன் (42) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மாஞ்சா நூல் லொட்டாய்கள், 46 காற்றாடிகள், 8 ரோல்கள் காற்றாடி தயாரிக்க பயன்படுத்தப்படும் கலர் பேப்பர், மஞ்சா நூல் பயன்படுத்தப்படும் மூங்கில் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in