கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது

கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது
Updated on
1 min read

சென்னை: கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றதாக, டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக கடந்த 17-ம் தேதி முன்னெடுத்தது. அப்போது, ‘டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டம் நடைபெறும்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் சென்னை மாவட்டம் பாஜக சார்பில் கோவிலம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலினின் படத்தை ஒட்டும் போராட்டம் நேற்று நடந்தது.

இதில், பாஜக நிர்வாகிகள் அன்னபூரணி, ராணி, மும்தாஜ், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலினின் படத்தை ஒட்டினர். இதையடுத்து எவ்வித அனுமதியுமின்றி ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமை செயலகம் நோக்கி... தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், தலைமைச் செயலகம் அருகே யாரும் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக தலைமைச் செயலகம் செல்லும் வாகனங்கள் முழுவதும் சோதனைக்கு உட் படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசுக்கு எதிரான பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் 5 பேர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூர் மண்டலத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பாஜகவினர் 5 பேரை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே கோட்டை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in