Published : 27 Feb 2025 06:42 PM
Last Updated : 27 Feb 2025 06:42 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நச்சுக் கலந்த கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கை கள்ளக்குறிச்சி போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்ததால், அவர்கள் இருவரையும் மார்ச் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்தாண்டு ஜூன் மாதம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நச்சுக் கலந்த கள்ளச் சாராயம் அருந்திய சம்பவத்தில் 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சைப் பெற்றதில் சிலர் கண்பார்வை இழந்துள்ளனர் . நச்சுக் கலந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம், விஜயா உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்தனர். முக்கியக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் அவரது சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட பலருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராய சம்பவத்தன்று கடலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு, கள்ளக்குறிச்சி நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் நச்சுக் கலந்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக, தற்போது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த தங்கராசுவின் ரத்த மாதிரி முடிவு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. ரத்த மாதிரி முடிவையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையும் ஒப்பிட்டு பார்த்தபோது, நச்சுக் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்ததாக தெரிய வந்ததுள்ளது.
இதனை ஆதாரமாக வைத்து, வழக்குப் பதிவுசெய்த கள்ளக்குறிச்சி போலீஸார், கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவரையும், இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்ப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் இந்த வழக்கில் வரும் மார்ச் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT