அரசு வேலை பெற்றுத் தருவதாக சிவசேனா கட்சி நிர்வாகியிடம் பண மோசடி

அரசு வேலை பெற்றுத் தருவதாக சிவசேனா கட்சி நிர்வாகியிடம் பண மோசடி
Updated on
1 min read

சென்னை: சிவசேனா கட்சி நிர்வாகியிடம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பாலகிருஷ்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவர், தமிழ் மாநில சிவசேனா கட்சி மாநில முதன்மைச் செயலராக உள்ளார். இவருக்கு தெரிந்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கலா என்பவர் வாயிலாக, வடபழனி துரைசாமி சாலையைச் சேர்ந்த பார்த்திபன் (55) என்பவர் அறிமுகமானார்.

பார்த்திபன் தனக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பழக்கம் உள்ளதாக, தண்டபாணியை நம்ப வைத்துள்ளார். பின், 2 ஆண்டுகளுக்கு முன் தண்டபாணி மற்றும் அவருக்கு தெரிந்த கீதா, மணிகண்டன், சீனிவாசன், கலா ஆகிய 5 பேரிடம் 3 மாதங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.42 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால், வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து, தி.நகர் துணை ஆணையரிடம் தண்டபாணி புகார் அளித்தார். அதன்பேரில் வடபழனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in