சென்னை | சீமராஜா பட நடிகர் மீது தாக்குதல்

சென்னை | சீமராஜா பட நடிகர் மீது தாக்குதல்
Updated on
1 min read

சென்னை: நட்சத்திர விடுதி மதுபாரில் நடிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ரிஷிகாந்த் (34). சென்னை அபிராமபுரத்தில் வசிக்கிறார். இவர் நேற்று அதிகாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான தனியார் நட்சத்திர விடுதி பாருக்கு சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான, தேனாம்பேட்டையை சேர்ந்த கார் ஷோரூமில் பணியாற்றும் ஹரிஷ் (33) என்பவர், ஓர் இளம் பெண்ணுடன் அங்கு நடனமாடிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து நடிகர் ரிஷிகாந்த் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஹரிஷ், நடிகர் ரிஷிகாந்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, பாரில் இருந்த பவுன்சர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். பின்னர், வாகன நிறுத்துமிடத்தில் உள்ள தனது காரை எடுப்பதற்காக, ரிஷிகாந்த் சென்றுள்ளார்.

அவரை பின் தொடர்ந்து வந்த ஹரிஷ் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் ரிஷிகாந்துக்கு கண் புருவத்தில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர், அவர் தாக்குதல் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in