Published : 05 Feb 2025 05:12 PM
Last Updated : 05 Feb 2025 05:12 PM

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோவில் 3 ஆசிரியர்கள் கைது

பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசிரியர்கள் 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 13 வயதான 8-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவியின் வீட்டுக்கு நேற்று மாலை சென்று விசாரித்தார். அப்போது மாணவி அதே பள்ளியின் ஆசிரியர்களான சிவம்பட்டி அருகே உள்ள எம்.பள்ளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் (48), பாரூர் அருகே உள்ள அனுமன்கோவில் பள்ளம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (57), வேலம்பட்டி அருகே உள்ள எருமாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37), ஆகிய 3 பேரும் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில் கருத்தரித்து கரு கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

இது குறித்து தலைமை ஆசிரியை குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் (சைல்டு லைன்) புகார் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தினரும் சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இச்சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்று அவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கைதான 3 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் அறிந்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பள்ளி மாணவிகள் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என விசாரணை நடத்தக் கோரி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “6 மாதத்துக்கு முன்பு பர்கூரில் தனியார் பள்ளியில் 13 வயது மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று இந்தச் சம்பவம் தொடர்பாகவும் அரசுப் பள்ளிக்கு விசாரணை குழு வந்து விசாரிக்க வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க தற்காலிக விசாரணை குழுவை அமைக்காமல், நிரந்தரமான குழுக்களை அமைக்க வேண்டும். அந்த குழுவினர், மாதம் ஒருமுறை பள்ளிகளுக்கு சென்று மாணவிகளின் குறைகளை கேட்டறிய வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x