சென்னை | உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதை பொருளாக விற்ற மணிப்பூர் பெண் கைது

உங்லியாசிங்
உங்லியாசிங்
Updated on
1 min read

சென்னை: வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்த மணிப்பூர் பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8,100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருவான்மியூர் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த பெண்ணை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். இதையடுத்து, அவர் கையில் வைத்திருந்த பையை சோதித்தனர். அதில் 8,100 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை அவர் போதைக்காக விற்பனை செய்ய காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் மணிப்பூர் மாநிலம், சிங்கட், சுரச்சந்த்பூர் பகுதியைச் சேர்ந்த உங்லியாசிங் என்ற ரெபெக்கா (30) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட உங்லியாசிங் உடல்வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் சட்ட விரோதமாக வாங்கி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கொரியர் மூலம் பெற்று மாணவர்கள், இளைஞர்கள், ஐ.டி ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை குறிவைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண்ணை போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in