

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத் துறை உதவி இயக்குநர் வள்ளல் (54), மணல், கல் குவாரி உரிமையாளர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தை காரில் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு நல்லிபாளையம் செக்-போஸ்ட் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் இருந்து கோவை சென்ற கனிம வளத் துறை உதவி இயக்குநர் வள்ளலின் காரை நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.