

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெண்கள் வார்டில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மருத்துவமனை பணியாளர்கள் விரைந்து வந்து அவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இவருடைய தாயார் உடல்நலக் குறைவால் அதே வார்டில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை பார்த்துக் கொள்ள அந்த வார்டுக்கு சதீஷ்குமார் வந்துள்ளார்.
அந்த நேரத்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இச்சம்பவத்தின்போது சதீஷ்குமார் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீஸார் சதீஷ்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.