

லக்னோ: தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை தீர்த்துகட்டுவதற்கு முன்பாக கொலை செய்வது எப்படி என்பதை முகமது அர்ஷத் மற்றும் அவரது தந்தை முகமது பதர் ஆகியோர் ஆன்லைனில் தேடியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை முகமது அர்ஷத் கொடூரமாக கொலை செய்தார். இதற்கு அவரது தந்தை முகமது பதரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த கொலை திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவது என்பது குறித்து அவர்கள் இருவரும் ஆன்லைனில் தேடியது போலீஸார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொலை நடந்த இடத்திலிருந்து 3 செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று முகமது அர்ஷத் உடையது. மற்ற இரண்டு போன்கள் அவரது தந்தை மற்றும் மூத்த சகோதரி பயன்படுத்தியது. இவை அனைத்தும் ரூ.12,000 முதல் ரூ.15,000 விலையுடையது.
அர்ஷத் மற்றும் அவரது தந்தையின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தியபோது பல்வேறு தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. அர்ஷத் இந்த சதித் திட்டத்தை எந்தவித எதிர்ப்பும், இடையூறுமின்றி எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து ஆன்லைனில் தேடியுள்ளார்.
அதன்படியே, கொலை செய்யும்போது தனது தாய் மற்றும் சகோதரிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். சுயநினைவின்றி, எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும்போது அவர்களை கொலை செய்துள்ளார்.
எப்படி மயக்கமருந்து வாங்குவது, கொலை செய்வதற்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தி மற்றும் பிற பொருட்கள் குறித்து ஆன்லைனில் தேடியது அவரது சர்ச் ஹிஸ்டரியை ஆய்வு செய்யும்போது தெரியவந்தது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.