ராமநாதபுரம்: ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் நோயாளி உள்பட மூன்று பேர் உயிரிழப்பு

விபத்து
விபத்து
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் நோயாளி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஆம்புலன்ஸில் வந்த நான்கு பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் உறவினர்கள் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் தனியார் ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு, ராமநாதபுரம் நோக்கி திரும்பிய விறகு லாரி ஆம்புலஸின் முன் பகுதியில் மோதியது.

இதில் நோயாளியின் மைத்துனர் சகுபர் சாதிக் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வரும் வழியில் நோயாளி வரிசைகனி, நோயாளியின் மகள் அனீஸ் பாத்திமா (40) ஆகியோரும் உயிரிழந்தனர். நோயாளியின் உதவிக்காக வந்த மண்டபம் தனியார் மருத்துவர் ஆயிஷா பேகம்(35), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஜியாஸ் (26), நோயாளியின் உறவினர்கள் ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40) மற்றும் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இதில் ஹர்ஷத், கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகியோர், ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஜியாஸ் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸின் பின்னால் வந்த ஒரு பேருந்தும், காரும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில் காரில் இருந்த இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in