அல்லு அர்ஜுன் வீடு தாக்குதல் | 6 பேருக்கு ஜாமீன்: முதல்வருக்கு தொடர்பா? - எதிர்க்கட்சிகள் சாடல்

அல்லு அர்ஜுன் வீடு தாக்குதல் | 6 பேருக்கு ஜாமீன்: முதல்வருக்கு தொடர்பா? - எதிர்க்கட்சிகள் சாடல்
Updated on
2 min read

ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜாமீன் பெற்றவர்களில் ஒருவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால், அல்லு அர்ஜுன் கைது, அவர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமா என்று சலசலக்கப்படுகிறது.

வீட்டின் மீது தாக்குதல்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுனின் வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றம் சுமத்தினார்.

இந்த சூழலில் நேற்று (டிச.22) உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அல்லு அர்ஜுனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டினை மாலை 4.45 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் வீட்டில் இருந்த பூத்தொட்டிகளை சேதம் செய்தனர். அதோடு கற்கள் மற்றும் தக்காளியை கொண்டு வீட்டினை தாக்கினர். அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீதேறியே போராட்டக்காரர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை அவர்களுக்கு நகர நீதிமன்றம் ஒன்று ஜாமீன் வழங்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரமும், இரண்டு பேர் உத்தரவாதமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. மூன்று நாட்கள் இதற்கு அவகாசம் வழங்கியுள்ளது.

முதல்வருடன் புகைப்படம்: இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டு ஜாமீன் பெற்றவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாச ரெட்டி முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும், அல்லு அர்ஜுனின் ரசிகர்களும் அரசியல் பழிவாங்கலால் அல்லு அர்ஜுன் நெருக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் முக்கியத் தலைவர் கிருஷாண்க் கூறுகையில், “ஜாமீனில் விடுதலையான ஸ்ரீநிவாஸ் ரேவந்த் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்புடையவர். அவர் 2019ல் நடந்த ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிட்டவர்.” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in