மாமல்லபுரம் அருகே கார் மோதி பயங்கர விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே கார் மோதி பயங்கர விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த நபர்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் அப்பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஏராளமான கழுவேலி இடங்கள் அமைந்துள்ளன. இங்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சலுக்காக தங்களது கால்நடைகளை அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், இன்று பிற்பகல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கால்நடைகளை அழைத்துக் கொண்டு பழைய மாமல்லபுரம் (ஒஎம்ஆர்) சாலையோரம் நின்றிருந்ததாக தெரிகிறது.

அப்போது, திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பகுதியை சேர்ந்த யசோதாம்மாள், லோகம்மால், கவுரி, விஜயா, ஆனந்தாயி ஆகிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுத்துவதாகவும், இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலிஸார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in