ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழப்பு
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது கஸ்ஸாலி (38). இவரது மனைவி நூருல் பாத்திமா(28). இவர்களுக்கு 4 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். முகமது கஸ்ஸாலி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நூருல் பாத்திமா திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் பைக்கில் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றனர். பைக்கை முகமது கஸ்ஸாலி ஹெல்மெட் அணிந்து ஓட்டிச் சென்றார். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பாபநாசம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயடைந்த கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in