சென்னை | 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

சென்னை | 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 15 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன், மனைவி உட்பட 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை அமைந்தகரை சதாசிவம் மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முகமது நிஷாத் (36) என்பவர் மனைவி நிவேதா என்ற நாசியாவுடன் (30) வசித்து வந்தார். இவர்கள், தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தினர். கடந்தாண்டு டிசம்பர் முதல் குழந்தை பராமரிப்பாளராக சிறுமி வேலை செய்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி, தான் பணி செய்த அடுக்குமாடி குடியிருப்பின் குளியல் அறையில் உடலில் பல்வேறு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அமைந்தகரை போலீஸார் விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார் சிறுமியை அயன்பாக்ஸால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியது, தாக்குதல் நடத்தியது, தொடர்ந்து அடித்து உதைத்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் முகமது நிஷாத், அவரது மனைவி நிவேதா என்ற நாசியா, நண்பர்களான கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் (26), அவரது மனைவி ஜெயந்தி (24), வீட்டு வேலைக்கார பெண் மகேஷ்வரி (40), முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம் (39) ஆகிய 6 பேரை கடந்த நவம்பர் 2-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in