செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாக புகார்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா
ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா
Updated on
1 min read

விழுப்புரம்: செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாக துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி அருகே ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக ஏழுமலை மனைவி சங்கீதா உள்ளார். இவர் கடந்த 2-ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விசாரித்தனர். அப்போது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் உட்பட 4 பேர் சாதியை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறி செப்டம்பர் 1-ம் தேதி செஞ்சி போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விசாரணைக்காக ஊரக வளர்ச்சித் துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா அளித்த புகாரின் பேரில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, அவரது கணவர் குணசேகர், 2 வது வார்டு உறுப்பினர் சுதா, அவரது கணவர் சரவணன் ஆகிய 4 பேர் மீது டிஎஸ்பி செந்தில்குமார் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in