திண்டுக்கல் - போலீஸ் மீது ரவுடி தாக்குதல்; துப்பாக்கியால் சுட்டு மடக்கிய காவல் ஆய்வாளர்

ரவுடி சச்சின் ரிச்சர்டு மீது துப்பாக்கிசூடு நடந்த திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டி சுடுகாடு பகுதி. (உள் படம்: ரவுடி சச்சின் ரிச்சர்டு )
ரவுடி சச்சின் ரிச்சர்டு மீது துப்பாக்கிசூடு நடந்த திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டி சுடுகாடு பகுதி. (உள் படம்: ரவுடி சச்சின் ரிச்சர்டு )
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நகர திமுக மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன். இவர் கடந்த ஆண்டு ஜூலையில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்நிலையில், பட்டறை சரவணன் கொலைக்கு பழிக்குப் பழியாக இன்னொரு கொலைச் சம்பவம் நடக்கும் என கணித்த போலீஸார், சரவணனின் முதலாமாண்டு நினைவுநாளில் நகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதனால் அந்த சமயத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

இந்நிலையில் சரவணன் கொலைக்கு பழிக்குப் பழியாக செப்டம்பர் 28- ம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சரவணன் கொலை வழக்கில் இருந்த இரண்டாவது குற்றவாளியான இர்பான் (24) என்பவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று, இர்பான் கொலையில் தொடர்புடைய முத்தழகுப்பட்டியை சேர்ந்த எடிசன் சக்கரவர்த்தி (24), மார்ட்டின் நிதிஷ்(23), ரிச்சர்டு சச்சின்(25) மற்றும் மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் லாரன்ஸ்(29) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இர்பான் கொலைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீஸார் ரிச்சர்டு சச்சினை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டி சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டிய ரச்சர்ர் சச்சின், அந்த சமயத்தில் அரிவாளை எடுத்து காவலர் அருண் பிரசாத்தை தாக்கியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தனது கை துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரிச்சர்ட் சச்சின் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரிவாளால் வெட்டப்பட்ட காவலர் அருணுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in