வரதட்சணை வழக்கு: கோவை போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை வழக்கு: கோவை போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
Updated on
1 min read

சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை போலீஸாரால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (30). இவர் மீது கடந்த ஆண்டு கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவானது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்ய முயன்ற சமயத்தில் அவர் தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக வந்த தகவலை அடுத்து, அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த முத்துசாமி என்பவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்த போது, அவர் கோவை போலீஸாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைப் பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்த அதிகாரிகள், கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோவை போலீஸார் சென்னை விமான நிலையம் வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in