

திருத்தணி: ஆந்திராவில் இருந்து, தமிழகத்துக்கு காரில் கடத்தப்பட்ட சுமார் 2 டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினருக்கு இன்று (புதன்கிழமை) காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் எஸ்பி-யான சீனிவாசப்பெருமாள் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் இன்று காலை திருத்தணி அருகே முருகம்பட்டு பகுதியில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திர பகுதியிலிருந்து வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அச்சோதனையில், அந்த சரக்கு வாகனத்தில் சுமார் 2 டன் எடை கொண்ட 17 செம்மரக்கட்டைகள் இருந்துள்ளது. அவை ஆந்திர பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளுடன் கூடிய அந்த சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தில் இருந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (45), ஜோதீஸ்வர ரெட்டி (44) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.