துறையூரில் வங்கி மேலாளர் வீட்டில் பைக் திருட்டு: “சாரி சிஸ்டர், பிரதர்” என சுவரில் எழுதிச் சென்ற திருடர்கள்

வீட்டுச்சுவரில் திருடர்கள் மன்னிப்புக்கோரி எழுதிய வாசகம்.
வீட்டுச்சுவரில் திருடர்கள் மன்னிப்புக்கோரி எழுதிய வாசகம்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் புறவழிச் சாலை அருகே உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் துறையூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இளங்கோ தனது மனைவி மஞ்சு மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றார்.

அண்மையில் வீடு திரும்பிய இளங்கோ தனது வீட்டின் முன்புறக்கதவு திறந்த நிலையில் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு, உள்புறக்கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டினுள் உள்ள மர பீரோவை உடைத்து திருட முயற்சித்து, ஏதும் கிடைக்காததால் வீட்டின் போர்டிகோவில் நின்று கொண்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்களுக்கு நகை, பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில் உள்புற அறையின் சுவற்றில், ‘சாரி பிரதர் / சிஸ்டர், மன்னித்து விடுங்கள்’ என கிரேயான் பென்சிலைக் கொண்டு எழுதிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக இளங்கோ அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நகை, பணம் இல்லாததால் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் சுவற்றில் மன்னிப்பு கேட்டு எழுதிய விநோத சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் துறையூர்-பெரம்பலூர் புறவழிச்சாலை குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து வருவதில்லை எனவும், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள காலி மனைகளில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் திறந்தவெளி மதுபானக்கூடமாக மாற்றி கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்தும் நிகழ்வும் தினந்தோறும் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in