ரூ.300 கோடி சொத்துகளை அடைவதற்காக மாமனாரை கொன்ற அரசு பெண் அதிகாரி கைது @ நாக்பூர்

ரூ.300 கோடி சொத்துகளை அடைவதற்காக மாமனாரை கொன்ற அரசு பெண் அதிகாரி கைது @ நாக்பூர்
Updated on
1 min read

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் புருஷோத்தம் புட்டேவார் (82). இவரது மனைவி சகுந்தலா (78). இவர்களது மகன் டாக்டர் மணீஷ். மணீஷின் மனைவி அர்ச்சனா (53), மகாராஷ்டிர மாநில டவுன் பிளானிங் துறையில் உதவி இயக்குநராக இருக்கிறார்.

புருஷோத்தம் புட்டேவாருக்கு ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை மகன் பெயரிலும், மருமகள் பெயரிலும் எழுதித் தருமாறு அர்ச்சனா கேட்டதாகத் தெரிகிறது. இதற்கு புருஷோத்தம் மறுத்துவிட்டார்.

இதையடுத்து புருஷோத்தமை கொலை செய்ய மணீஷின் கார்டிரைவர் பாக்டே, அவரது கூட்டாளிகள் நீரஜ் நிம்ஜே, சச்சின் தார்மிக்ஆகியோருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்துள்ளார் அர்ச்சனா. இதற்காக அவர்களுக்கு ரூ.1 கோடி தருவதாக வாக்கு கொடுத்துள்ளார் அர்ச்சனா. இந்நிலையில் அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியைப் பார்த்துவிட்டு திரும்பிய புருஷோத்தம் மீது காரை ஏற்றி அந்தக் கும்பல் கொலை செய்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புருஷோத்தமை கொல்வதற்கு அர்ச்சனா கூறியபடி புது காரை கூலிப்படையினர் வாங்கியுள்ளனர். அந்த கார் மூலம் புருஷோத்தமை கொலை செய்துள்ளனர். இதையடுத்து அர்ச்சனா கைது செய்யப் பட்டார்.

அர்ச்சனா மீது மேலும் சில முறைகேடு வழக்குகள் உள்ளன. சட்டவிரோத லே-அவுட்டுகளுக்கு அனுமதி தருவதற்காக பல்வேறு விதிமுறைகளை மீறியுள்ளார் அர்ச்சனா. இதுதொடர்பாகவும் விசாரிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in