திருவிடைமருதூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட பாமக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவு

திருவிடைமருதூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட பாமக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவு
Updated on
1 min read

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், கொடியாலத்தில் வயல்கள், அரசு இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 100 யூனிட் மணலை கடத்தி விற்பனை செய்த பாமக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவானார். இதற்கு பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கொடியாலத்தில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி விற்பனை செய்வதாக திருவிடைமருதூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் பேரில், திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர், ஜூன் 1-ம் தேதி நள்ளிரவு அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அங்கு மணல் கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது.

இது தொடர்பாக கூத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் கோகுல், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இதற்கு காரணமாக கருதப்படும் பாமக ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 கனரக வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பாமக ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜைத் தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்தக் கிராமம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் கூறியது: "கொடியாலத்தில் தொடர்ந்து மணல் கடத்தி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினருடன் அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட போது, கோவிந்தராஜூக்கு சொந்தமான இடம், விவசாய வயல்கள், அரசுக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 4 ஏக்கர் பரப்பளவில், சுமார் 25 அடி ஆழத்திற்கு, மணல் திருடி விற்பனைக்காக கடத்துவது தெரிய வந்தது. பின்னர், அங்கு விசாரணை மேற்கொண்ட போது, அதேப் பகுதி பாமக ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ், இதில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தில் இருந்த 1 லாரி, 2 ஜேசிபி, 3 டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தபோது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த கோவிந்தராஜ், வாகனங்களின் சாவியைப் பறித்து, அந்த வாகனங்களின் டயர்களை கீழித்து, அங்கு பணியில் இருந்த போலீஸாரை மிரட்டினார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையறிந்து, தலைமறைவாகி உள்ள பாமக ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜைத் தேடி வருகின்றோம்."

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in