சென்னையில் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு: காரை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

சென்னையில் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு: காரை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Published on

சென்னை: சென்னையில் சாலையைக் கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞரின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர்.

சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் என்ற ஆகாஷ் (26). இவர் நேற்று நள்ளிரவு தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு நோக்கி அதி வேகமாக வந்த கார் ஒன்று டேவிட் மீது பயங்கரமாக மோதியது. இதில், சுமார் 6 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே டேவிட் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அமைந்தக்கரை ஸ்கைவாக் அருகே போலீஸார் சம்பந்தப்பட்ட காரை மடக்கி நிறுத்தினர்.

காரை ஓட்டி வந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த அஜிம் (26) என்பவரை அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து, காருடன் சிந்தாரிப்பேட்டையில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, டேவிட்டின் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டு விபத்தை ஏற்படுத்திய கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் அங்கு கூடியிருந்த டேவிட்டின் உறவினர்களை அப்புறப்படுத்தி, மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in