இலங்கையிலிருந்து கடத்திய ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல்வழியாக தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமநாதபுரம் அருகே வாகனத்தில் சென்ற ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் 6 கிலோ கடத்தல் தங்கம்வைத்திருந்தது தெரிய வந்தது. தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, சிவகங்கை அருகே 2 வாகனங்களில் வந்தவர்கள், வழியில் நின்றிருந்த இருவரிடம் தங்கத்தைக் கொடுத்தபோது, அதிகாரிகள் அவர்களைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோதங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராவுத்தர் கனி, சதாம் உசேன், தில்லை சிதம்பரம், மணிகண்டன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனி மைதீன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in