Published : 30 Apr 2024 04:38 AM
Last Updated : 30 Apr 2024 04:38 AM

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியது நிரூபணம்: பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு

கோப்புப்படம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதியம்மாள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி (56).இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பெயரை கூறி, தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கல்லூரி செயலர் ராமசாமி, 5 மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து,கடந்த 2018 ஏப்ரல் 16-ம் தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

தொடர் விசாரணையில், காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொழில் தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிமன்றத்தில் 1,160 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் 2018 ஜூன் 13-ம் தேதி தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகாததால், தீர்ப்பு 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் நேற்று ஆஜராகினர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். முருகன், கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இதையடுத்து, நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பிறழ் சாட்சியம்: தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் சிபிசிஐடி தரப்பு அரசு வழக்கறிஞர் எம்.சந்திரசேகர் கூறியபோது, ‘‘சிபிசிஐடி போலீஸார் சிறப்பாக விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், பல்கலைக்கழக சக பணியாளர்கள் பிறழ் சாட்சியமாக மாறியதால், மற்ற 2 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களை தயார் செய்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x