Published : 30 Apr 2024 06:20 AM
Last Updated : 30 Apr 2024 06:20 AM

கோடிக்கணக்கில் பணம் வைத்து ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

கோப்புப்படம்

சென்னை: ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஒவ்வொருவரும் எத்தனை ரன் சேர்ப்பார்கள்? விக்கெட் விழுமா? யார் வெற்றி பெறுவார்கள்? இப்படி பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தகவல் கிடைத்தது.

முதல் கட்ட விசாரணையில் வட சென்னையில் இதுபோன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, வட சென்னை காவல் இணை ஆணையர் அபிஷேக் தேஷ்முக் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதில், கடந்த 28-ம் தேதிநடைபெற்ற சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இதேபோல், ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து யானைகவுனி, பெருமாள் முதலி தெருவில் உள்ள அறை ஒன்றில் வைத்து சவுகார்பேட்டை தீரஜ் (33), அதே பகுதி கஜேஷ் (32), சந்தீப் (33), ஏழுகிணறு ராஜேஷ் (33) ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து யானைகவுனி காவல் நிலைய போலீஸில் ஒப்படைத்தனர்.

இதேபோல் இணையதளம் மூலம், பல கோடி ரூபாய்க்கு ஐபிஎல் போட்டி சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதை அடிப்படையாக வைத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

டிக்கெட் விற்ற 8 பேர் கைது: சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிக்கான டிக்கெட்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக திருவல்லிக்கேணி போலீஸுகு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸார் மைதானம் மற்றும் அதைச் பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்து, 8 இடைத் தரகர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.72,242 மதிப்புடைய 26 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x