Published : 29 Apr 2024 04:50 AM
Last Updated : 29 Apr 2024 04:50 AM

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு படகில் கடத்திய ரூ.600 கோடி போதை பொருள் பறிமுதல் @ குஜராத்

காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடல் எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் 60 போதைப் பொருள் பொட்டலங்களை படகில் கடத்தி வந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்: இந்த நிலையில், குஜராத் கடற்பகுதியில் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு ஒன்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.

இதையடுத்து, கடலோர காவல் படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி), குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து பாகிஸ்தான் படகை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். கடலோர காவல் படையின் ராஜ்ரதன் கப்பலும், விமானமும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

86 கிலோ போதைப் பொருள்: இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி, அந்த படகை பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 86 கிலோ போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளனர். அதன் மதிப்பு ரூ.600 கோடி என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கடலோர காவல் படை கப்பலான ராஜ்ரதனில் கடலோர காவல் படையினர், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், தீவிரவாத தடுப்பு அதிகாரிகள் சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாகஒரு படகு வந்தது. எங்களை பார்த்ததும், அதில் இருந்தவர்கள் தப்பிக்க முயன்றனர். அவர்களை நாங்கள் சுற்றி வளைத்தோம்.

அந்த படகில் 86 கிலோ போதைப் பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இந்திய கடலோர காவல்படை, என்சிபி, ஏடிஎஸ் ஆகிய 3 அமைப்புகளின் கூட்டு முயற்சியால் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் ஆலை: இதற்கிடையே, குஜராத்தை சேர்ந்த மனோகர்லால் எனானி, ராஜஸ்தானை சேர்ந்த குல்தீப் சிங் ராஜ்புரோகித் ஆகிய இருவர் மெபெட்ரோன் போதைப் பொருள் தயாரிக்கும் ஆலைகள் நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி சோதனை நடத்தினர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோஹி, ஜோத்பூர் மற்றும் குஜராத்தில் காந்தி நகர், அம்ரேலியில் நடத்தப்பட்டு வந்த போதைப் பொருள் தயாரிப்பு ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, 149 கிலோ மெபெட்ரோன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் மொத்த மதிப்புரூ.230 கோடி என்று அதிகாரிகள்தெரிவித்தனர். இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நடத்தி வந்த ஆலையில் எவ்வளவு போதைப் பொருள் தயாரித்து வந்துள்ளனர், அவற்றை எங்கு விற்பனை செய்தனர்,இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x