

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை கடத்தி வந்த கம்போடியா நாட்டு பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கத்தார் நாட்டில் இருந்து வந்த பயணியிடம் ரூ.50 கோடி மதிப்புள்ள கோக்கைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று நேற்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
பின்னர், அவருடைய உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது, அவரது பையில் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
கடத்தல் பின்னணியில்.. அந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் 3.5 கிலோ கோக்கைன் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த பயணியை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த போதை பொருள் கடத்தலில் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எங்கிருந்து வருகிறது? என பல்வேறு கோணங் களில் அந்த பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சர்வதேச கும்பல்: இந்த பயணி சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்றும், தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதால், மேற்கொண்டு எந்த தகவலும் வெளியிட முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் அதிகாலை ரூ.50 கோடி மதிப்புடைய கோக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ.35 கோடி மதிப்புடைய, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.