போக்சோ வழக்கில் பொய் புகார் அளிக்க தூண்டியவருக்கு சிறைத் தண்டனை @ திருப்பூர்

சங்கர்
சங்கர்
Updated on
1 min read

திருப்பூர்: போக்சோ வழக்கில் சிறுமியை பொய் புகார் அளிக்க தூண்டியவருக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு பள்ளிச் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து தொழிலாளி ஒருவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் தனது சித்தப்பா கூறியதால் பொய்யாக பாலியல் தொந்தரவு புகார் கொடுத்ததாக நீதிமன்றத்தில் சிறுமி தெரிவித்தார். விசாரணையிலும் அது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொய்யாக பாலியல் புகார் அளிக்க தூண்டிய சிறுமியின் உறவினரான போயம்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (38) என்பவர் மீது மாவட்ட மகளிர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடுத்து விசாரித்தது.

இந்நிலையில், சிறுமியை பொய் பாலியல் புகார் அளிக்க தூண்டிய சங்கருக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜரானார். இதையடுத்து சங்கரை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கில் பொய்யாக புகார் அளித்தவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in