ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது: நேபாளத்திலிருந்து திரும்பியபோது பிடிபட்டார்

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது: நேபாளத்திலிருந்து திரும்பியபோது பிடிபட்டார்
Updated on
1 min read

சென்னை: வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர்கைது செய்யப்பட்டார். அவர் நேபாளத்திலிருந்து டெல்லி திரும்பியபோது பிடிபட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகர், மேட்லி 2-வதுதெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான இவர் கடந்த 29-ம் தேதி மாலை வேளச்சேரி தாலுகா அலுவலகம் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்குஇருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டுத் தப்பியது. இதுகுறித்து தரமணிகாவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவான கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீஸார் கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சுப்பையன் (68),பெரும்பாக்கம் எழில்நகர் குமார் (32),அதே பகுதி சூர்யா (24), ஆறுமுகம் (24), ராமநாதபுரம் இலமநேரி சைவபாண்டி (30), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் காளீஸ்வரன் (26) ஆகிய 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பழனிச்சாமி நிலம் வாங்கி தருவதாக தற்போது கைது செய்யப்பட்ட சுப்பையனிடம் ரூ.28 லட்சம் பணம் பெற்று நிலத்தை வாங்கித் தராமலும், பணத்தையும் திரும்பக் கொடுக்காமலும் மோசடி செய்ததே கொலைக்குக் காரணம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக உருத்திர குமாரன் என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.இதையடுத்து, அவர் தலைமறைவானார்.

இதுகுறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் தகவல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அவர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்துடெல்லி திரும்பியபோது குடியேற்றஅதிகாரிகள் உருத்திர குமாரனை கைது செய்து தரமணி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in