கோவில்பட்டியில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் திருட்டு

கோவில்பட்டியில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் திருட்டு
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.48 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராஜிவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சிங்கராஜ். கயத்தாறு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சென்று விட்டனர். சிங்கராஜ் நேற்று காலை வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.48 லட்சம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து, அவர் அளித்த தகவலின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து அதில் பதிவான கைரேகைகளை பதிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

மற்றொரு வீட்டில் திருட்டு: அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி அன்புச்செல்வி (48). இவர் நேற்று முன்தினம் ஊருக்குச் சென்று விட்டார். இவரது மகள் சித்ரா நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டார். இந்நிலையில் ஊருக்குச் சென்று விட்டு அன்புச் செல்வி நேற்று மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அச்சம் அடைந்தார். வீட்டுக்குள் பீரோவை பார்த்தபோது அதிலிருந்து பணம் சுமார் ரூ.25 ஆயிரம் மற்றும் மடிக்கணினி, வெள்ளிச்சங்கு, வெள்ளி குங்குமச்சிமிழ் உள்பட வெள்ளிப் பொருட்களும் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in