

மதுரை: சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி ஒரே நாளில் உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் வழிப்பறி வழக்கு ஒன்றில் மதிச்சியம் காவல்துறையினரால் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவரது உறவினர்கள், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் கூறியுள்ளனர். எனவே கார்த்திக் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பி சிறை முன் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.