Published : 30 Mar 2024 06:22 AM
Last Updated : 30 Mar 2024 06:22 AM

சமயபுரம் கோயிலில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு

திருச்சி: திருச்சி சமயபுரம் கோயிலில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணையும் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு (29). ஓட்டுநர். இவரது மனைவி கவுதமி. தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கவுதமி நேற்று முன்தினம் தனது மூத்த மகனை வீட்டில் இருக்கவைத்துவிட்டு, மற்றொரு மகன், மகள் மற்றும் உறவினர்களுடம் சமயபுரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது, குளித்துவிட்டு, வருவதாக கூறி, தனது அக்கா முத்துலெட்சுமியிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றார்.

முடிமண்டபத்தின் அருகே குழந்தைகள் இருவரும் இரவு 8 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். கவுதமி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது, 2 வயது பெண் குழந்தை தமிழழகியை காணவில்லை. இதில், அதிர்ச்சி அடைந்த கவுதமி அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதுகுறித்து சமயபுரம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, குழந்தை மாயமான பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு பெண் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் வழியாக குழந்தை தமிழழகியுடன் செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீஸாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. இரவு 10 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே குழந்தை தமிழழகியுடன் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து, விசாரணை நடத்தினர். .

அதில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை துளசியபுரத்தைச் சேர்ந்த நீலாவதி(50) குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, நீலாவதியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட குழந்தையை அவரது தாய் கவுதமியிடம் ஒப்படைத்தனர்.

சமயபுரம் கோயிலில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை 2 மணிநேரத்தில் மீட்ட காவல் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட போலீஸாருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x