

பொன்னேரி: மணலி புதுநகர் அருகே விச்சூர் துணை தலைவரின் கணவர் கொலை வழக்கு தொடர்பாக 5 மாதங்களுக்குப் பிறகு ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை- மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சியின் துணை தலைவர் வைதேகியின் கணவரான அதிமுக பிரமுகர் சுமன் கடந்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுமனுக்கும், அவரது உறவினரான விச்சூர் ஊராட்சி தலைவர் சங்கருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
கொலை நடந்த நாள் முதலே சுமன் கொலைக்கு விச்சூர் ஊராட்சி தலைவருமான சங்கர் தான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என, சுமனின் மனைவி வைதேகி தொடர்ந்து காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்தார்.
இதற்கிடையே சுமன் கொலை தொடர்பாக மணலிபுதுநகர் போலீஸார்,விச்சூர் பகுதியை சேர்ந்த 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சுமன் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சங்கர் என, தெரிய வந்தது.
இதையடுத்து, 5 மாதங்களுக்குப் பிறகு, தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த சங்கரை கடந்த 25-ம் தேதிதனிப்படை போலீஸார் கைது செய்தனர்.