காசிமேடு பகுதி கடலில் சடலமாக மிதந்த ஆந்திர தொழிலாளி: கொலையா என போலீஸ் விசாரணை

காசிமேடு பகுதி கடலில் சடலமாக மிதந்த ஆந்திர தொழிலாளி: கொலையா என போலீஸ் விசாரணை

Published on

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக கடல் பகுதியில் ஆந்திர தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு உட்பட்ட பைபர் படகுகள் கட்டும் இடத்தில் கடல் நீரில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸார் சம்பவ இடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடலில் சடலமாக மிதந்தது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்து (56) என்பதும், இவர், கடந்த 7 மாதங்களாக ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில்தான் அவர் கடலில் சடலமாக மிதந்துள்ளார். எனவே, அவர் கடலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கடலில் வீசினார்களா என்ற கோணங்களில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in