கரூர் | போதைக்காக வலி நிவாரணியை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த 6 பேர் கைது

கரூர் | போதைக்காக வலி நிவாரணியை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த 6 பேர் கைது
Updated on
1 min read

கரூர்: கரூரில் வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி போதை ஏற்படும் என கல்லூரி மாணவர்களை நம்பவைத்து அவற்றை ஆன்லைன் மூலம் வாங்கி விற்பனை செய்த 6 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட அம்மா சாலை அருகே கரூர் நகர காவல் காவல் ஆய்வாளர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது 24, பசுபதிபாளையம் சுரேந்தர் வயது 23 ஆகிய இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது, அவர்கள் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. அதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டதில், வலி நிவாரண மாத்திரைகளை கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதை ஊசியாக பயன்படுத்த அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து அதனை பொடி செய்து, குளுக்கோஸ் உடன் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தி பயன்படுத்தி வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த இதிகாஸ் வயது 25, பிரபு வயது 21, ஈரோடு மாவட்டம் சூலையூர் பகுதியைச் சேர்ந்த விஷால் கார்த்திக் வயது 27, கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் வயது 23, ஆகிய 6 பேரையும் பிடித்து, கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிந்து நேற்று (மார்ச் 14ஆம் தேதி) இரவு கைது செய்தனர்.

வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் உள்ள நரம்புகளில் செலுத்துவதன் மூலம் மலட்டுத்தன்மை சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல்நலக் கோராறுகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in