Published : 13 Mar 2024 06:15 AM
Last Updated : 13 Mar 2024 06:15 AM

சென்னை | ஆள் மாறாட்டம் செய்து ரூ.6.5 கோடி சொத்து அபகரிப்பு: கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

முத்துகுமார், குமார், வடிவேல், சகாதேவன்

சென்னை: ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரியின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள காலி மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் ராதை(81). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘மாதவரம் தணிகாச்சலம் நகரில் எனது தாயாருக்குச் சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள காலிமனை உள்ளது. தாயார் காலமானதையடுத்து, அச்சொத்து எனது அனுபவத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இறந்துபோன எனது தாயார் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து சிலர் எங்களது சொத்தை அபகரித்து விட்டனர். எனவே, எங்களது சொத்தை மீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ராஜாபால் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்டதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரான கொளத்தூரைச் சேர்ந்த குமார்(42), அவரது கூட்டாளிகள் மாதவரம் சகாதேவன் (48), வடிவேல் (59), முத்துக்குமார் (43) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x