

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள டான்சி அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிபவர் அருண். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘கடந்த 5-ம் தேதி எனது செல்போனுக்கு முன்பின் தெரியாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், டான்சியின் நிர்வாக இயக்குநர் ஸ்வர்ணா ஐஏஎஸ், புகைப்படத்துடன் இருந்தது. அந்த எண்ணுக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை.
ஆனால் அவரது பெயரைக் கூறி, எனக்குத் தொடர்ச்சியாக அமேசான் பரிசுக் கூப்பன் கேட்டு குறுஞ்செய்தி வந்தது. இதனால் எங்களுடைய நிர்வாக இயக்குநரின் புகைப்படம், அவரது அடையாளத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்களால் மோசடி நடைபெறுவது எனக்குத் தெரியவந்தது.
எனவே, மோசடி நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே அரசு உயர் அதிகாரிகள், ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் பரிசுக் கூப்பன் மோசடி எனப்படும்பாஸ் ஸ்கேம் நடைபெற்று வந்தநிலையில், தற்போது மீண்டும்ஐஏஎஸ் அதிகாரி பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.